சொதப்பற்றமிழ்

நேற்று ரயில்பயணத்தில் தீராநதி, விகடன், நக்கீரன் - வாங்கிப்படித்தேன். மூன்றுமே வெவ்வேறு வகையில் படிக்கமுடியாதபடி இருந்தன. சராசரி இந்திய ஆங்கிலப் பத்திரிகைகளின் உரைநடை தரத்தைக் கூட எட்டமுடியாதபடி தமிழ்ப்பத்திரிகைகள் இருக்கின்றன. 'கட்டுரைகள் சகிக்கமுடியாதபடி மேலோட்டமாக இருக்கின்றன' என்பது என் மேலோட்டமான அபிப்ராயம். "சராசரி வாசகர்..." என்று ஆரம்பிக்கும் சொற்றொடர்களில் எதிர்வாதம் தொடங்கும் என்பதால், நக்கீரன், விகடனை விட்டுவிட்டு, சற்றே high-brow வாசகர்களுக்கான தீராநதிக்கு வருகிறேன்.

நவீனத்துவம்: மேற்கும் கிழக்கும் என்று ஒரு தொடர். மோனிகா என்பவர் எழுதுகிறார். ஓவியம் பற்றிய தொடரா, இல்லை எல்லா கலைகளைப் பற்றியும் எழுதி வருகிறாரா என்று தெரியவில்லை. ஆகஸ்ட் இதழில் அத்தொடரின் எட்டாம் அத்தியாயம் வந்திருந்தது: ஓவியர் எப்.என்.சூசா பற்றி எழுதியிருக்கிறார்.

எனக்கு ஓவியம் பற்றி(யும்) ஒரு எ.வும் தெரியாது என்பதால் நான் படித்த கட்டுரையின் உள்ளடக்கத்தைப் பற்றிச் சொல்ல எனக்கு எதுவும் இல்லை. அவர் எழுதும் முறையைப் பற்றி மட்டுமே இவ்விடுகை.

ஆரம்பத்துலயே ஆரம்பிச்சுட்டாய்ங்களா

முதலில் epigraph.


பிறப்பினையும் இறப்பினையும் குறித்த பயங்களுக்கு நடுவே ஒரு சிறு கொசு வலையைப் போல் பின்னப்படுவது அன்பு - பிரான்ஸிஸ் பேகான்
கூகிளிப் பார்த்தேன். இவர் தான் அந்த 'பேகான்'
பேக்கன் என்பது தான் உச்சரிப்பு என்பது என் துணிபு. வார்ன் என்ற பெயரை வார்னே என்றும், சஹீர்கான் என்ற பெயரை ஜாகிர்கான் என்றும் பன்னெடுங்காலமாக வழங்கிவரும் பண்பாடு நம்முடையது என்பதால், இதையெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது.குறைந்தபட்சம் இதையெல்லாம் கேள்வி கேட்பதில்லை என்பதையாவது இங்கே பதிவுசெய்து விடுகிறேனே.

"பிறப்பையும், இறப்பையும்" என்று எழுதாமல் "பிறப்பினையும், இறப்பினையும்" என்று எழுதுவானேன்?

'முன்னதில் கவித்துவம் இல்லை, பின்னதில் தான் இருக்கிறது' என்று சொல்லி, 'இதைக்கூட உணர முடியாது ஞானசூனியன்' என்று என்னைத் திட்டினால், எனக்கு சந்தோஷம்தான். குறைந்தபட்சம், மிகுந்த பிரக்ஞையோடு இந்த சொற்தேர்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்றாவது அதனால் ஊர்ஜிதகமாகும். சும்மா, தேவையில்லாமல் ஒரு 'இனை'யை இணைத்ததாகத் தான் எனக்குத் தோன்றுகிறது.

வார்னே போல, இதுவும் பொதுவான நடப்பது தான். மேலே செல்வோம்.

லூவ்ரில் சிக்கி அவதி

பாரிஸ் லூவர் அருங்காட்சியகத்தின் அடித்தளத்தில் சென்று சிக்கிக்கொண்ட யாருமே அங்குள்ள ரோமானிய, கிரேக்க சிற்பங்களைப் பார்க்கும்போது தனது காதலர்கள் அருகில் இல்லையே என அவதியுறாமலிருக்க முடியாது
இப்படி எழுதியதில், எழுத்தாளருக்கு ஏதோ நகைச்சுவை எண்ணம் இருந்திருக்கிறது என்று நம்புவோமாக. லூவ்ர் போன்ற இடத்தில் தனியாக இருப்பதில் உள்ள பிரிவுத்துயரைச் சொல்ல முற்பட்டிருக்கிறார். 'குன்ஸா' புரிகிறது. ஆனால் 'சிக்கிக்கொண்ட' வரை படித்தால் 'தனியாக சிக்கிக்கொண்ட' என்ற பொருள் வருகிறதா என்ன? ஆசிரியர் மனதில் தோன்றியது தாளில் வரவில்லை.

'பத்தாப்பு' வரைக்குமே தமிழ் படித்தேன். அதனால் ஏன், எதற்கு என்று சொல்லத் தெரியாது என்றாலும், 'தனது என்பது தப்பு, தமது என்று எழுதினால் தான் தத்தமது (தலா ஒரு காதலர்) என்ற பொருள் வரும்' என்று நினைக்கிறேன். 'பல காதலர்கள்' என்ற அர்த்தசாத்தியத்தை முடக்கக்கூடாது என்பதற்காகவே 'தனது' என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறதோ என்னவோ - ஒரு வாக்கியத்தில் எத்தனை புரட்சிகள்!

பூண்டும் உயிரியும்

அழகிய பூந்தோட்டம், ஆரவாரம் பூண்டுப் பாய்ந்து சிரிக்கும் அருவியென ஒவ்வொன்றைப் பார்க்கும்போதும் அதன் அழகைப் பகிர்ந்துகொள்ள மற்றொரு உயிரியை நம் மனம் நாடுவது இயல்பாகிப்போகிறது

ஆரவாரம் என்பது பூணப்படும் ஒன்றா? கவித்துவ நடை என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா? சரி அதென்ன 'உயிரி'? பொதுவாக creature என்ற பொருள்படும் இடத்தில் அச்சொல் பயன்படுத்துவார்கள். Lonely creature போன்ற ஆங்கில idio(m)த்தை மொழிபெயர்த்ததுபோல இருக்கிறது. ஒட்டவில்லை.

இன்னும் கவித்துவம் தொடர்கிறது போலும். ச்சாய்ஸில் விடுவதே கற்பூர நாற்றமறியா என் போன்றோருக்கு உசிதம்.

வெகுண்டெழச்செய்யக்கூடிய ஒரு கழிப்பிடம்

கே.ஜி.சுப்பிரமணியத்தின் துர்கை ஓவியங்கள், தாயிப் மெஹதாவின் பாதி அரூப வடிவிலான மகிஷாசுர மர்தினி போலல்லாமல் இவரது ஓவியங்கள் தமிழ்நாட்டின் ஒரு பொதுக்கழிப்பிடத்தில் காணப்படும் மனிதர்களின் அந்தரங்க உறுப்புக்களை அப்பட்டமாக வரைவதுடன் அதனைக் குறித்த பார்வையில் உள்ள நுட்பங்களில் சிலரை வெகுண்டெழச் செய்யக்கூடியன

கழிப்பிட ஓவியங்களில் தமிழ்நாட்டுக்கத் தனித்தன்மைகள் உண்டென அறியேன். 'எனிவே', உள்ளடக்கம் பற்றிய பஞ்சாயத்தை வேறு யாராவது கூட்டட்டும்.

அதென்ன 'ஒரு பொதுக்கழிப்பிடத்தின்'? 'தமிழ்நாட்டின் பொதுக்கழிப்பிடங்களில்' என்று எழுதலாம். அல்லது 'தமிழ்நாட்டில் எந்த ஒரு பொதுக்கழிப்பிடத்திலும்' என்று பொதுமைப்படுத்தலாம். இப்போது உள்ள வரியை பார்த்தால் ஏதோ ஒரு குறிப்பிட்ட கழிப்பிடத்தை ஆசிரியர் சுட்டுவது போலத் தோன்றுகிறது. இல்லையா?

அடுத்தது வாக்கிய அமைப்பு:
இவரது ஓவியங்கள் ..... அந்தரங்க உறுப்புக்களை அப்பட்டமாக வரைவதுடன்
அதாவது, ஓவியங்கள் வரைகின்றன. தம்மைத்தாமே வரைந்துகொள்ளும் ஓவியங்களா என்ன?
அதனைக் குறித்த பார்வையில்
அதனை- எதனை ?
உறுப்புகள் என்ற பன்மைக்கு 'அவற்றை' என்றல்லவா வரவேண்டும்? இந்த ஒருமை-பன்மை குழப்பங்கள் பற்றியெல்லாம் இன்று யாரும் அலட்டிக்கொள்வதில்லை.
பார்வையில் உள்ள நுட்பங்களில் சிலரை வெகுண்டெழச் செய்யக்கூடியன
'நுட்பங்கள் வெகுண்டெழச் செய்யக்கூடியன' என்று எழுதினால் புரிகிறது. 'நுட்பங்களில் வெகுண்டெழுவது' என்றால் என்ன அர்த்தம்

"அந்தரங்க உறுப்புகள் குறித்த அவர் பார்வையில் உள்ள நுட்பங்கள் சிலரை வெகுண்டெழச் செய்யக்கூடியன" என்று கழற்றிப் பார்த்து, சேர்த்துப் படித்துப் புரிந்துகொண்டேன்.

மிகையாகாத காலம்

புனிதங்களை அபுனிதமாக மாற்றும் பணியில் வெற்றி பெற்றார் என்றால் மிகையாகாது
தற்கால நடையில் எழுதிக்கொண்டே வருகிறவர், திடீரென்று 'என்றால் மிகையாகாது' என்ற அரதப்பழசான மேடை நாடகீய சொற்றொடரைப் பயன்படுத்துகிறார். அதில் ஏதும் முரண் இருப்பதாகக் கூட அவருக்குத் தோன்றவில்லை.

அதுவரை இறந்தகாலத்தில் ஓடிக்கொண்டிருந்த சரிதை ஒரு அரைக்கணத்துக்கு நிகழ்காலத்துக்குத் தாவுகிறது (பயணமாகிறார்). சரி, அந்த ஒரு பத்தியில் வரும் சில நிகழ்வுகள் வரையில் அந்த காலத்தை consistentஆகக் கடைபிடிப்பார் என்று எதிர்பார்த்தால், அதுவும் இல்லை.

புரிதல் வெளிக்கு அப்பால்

பேகானின் ஓவியத்தில் கிறித்துவ மதத்தின் ஆதிக்க சக்திகள் கேலி செய்யப்பட்டன. தனது காதலர்களின் மறைவிற்குப் பிறகு அவர் வரைந்த சிலுவைக்கு அடியில் காணும் மூன்று பிம்பங்கள் குறித்த பயிற்சி பார்ப்போரை மனித இருப்பை கேள்விக்கு உட்படுத்தச்செய்பவை
இக்கட்டுரையில் பல இடங்களைப் படிக்கும்பொழுது, 'கமா போடுவது கொலைக்குத்தம்' என்று ஆசிரியர் கருதுவதாகத் தெரிகிறது. இவ்விடத்தில் மேற்கோள் குறிகள் (') பயன்படுத்துவதிலும் சிக்கனம் கடைபிடித்துக் குழ்ப்பி இருக்கிறார்.

அவர் வரைந்த, 'சிலுவைக்கு அடியில் காணும் மூன்று பிம்பங்கள் குறித்த பயிற்சி'' பார்ப்போரை.... என்று எழுதியிருக்க வேண்டும். அப்படி இருந்தால், வாசகன் தேடிப்பிடித்து இங்கு செல்லக் கூடும். அதில்லாமல் வாசகன் அந்த வாக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்று சவால் விட்டு உறுதி கூறுகிறேன்.

நகர்த்தி நகர்த்தி

பதினேழாம் நூற்றாண்டுக்குப் பிறகு போர்கள், பஞ்சம், பிராந்திய/தேசிய/இன வர்க்க அடையாளங்கள் போன்ற பல கண்டுபிடிப்புகள், நமது இறைமை என்னும் தேவதைக் கதைகளிலிருந்து நம்மை நகர்த்தி மானுட யதார்த்தங்களை நோக்கி நகர்த்தியது.
கண்டுபிடிப்புகள்!! ஒன்றுமில்லை, discovery of our identities போன்ற வாக்கியம் எதையோ சிந்தித்து, கட்டாய மொழிமாற்றம் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

இறைமை என்பது sovereignty (இறையாண்மை) என்ற அர்த்தத்தில் தான் பயன்படுத்தப்பட்டுப் பார்த்திருக்கிறேன். இங்கு divinity/celestiality என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியே இருந்தாலும்
'இறைமை என்னும் தேவதைக்கதைகள்'
என்ற சொற்றொடரில் ஏதோ பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. 'தேவதைக்கதைகளின் தொகையான நமது இறைச்சிந்தனை' என்ற அர்த்தத்தை ரத்தினச்சுருக்கமாக தெரிவிக்க முனைந்து, கோணலாக வந்து விழுந்திருக்கிறது.
தேவதைக் கதைகளிலிருந்து நம்மை நகர்த்தி மானுட யதார்த்தங்களை நோக்கி நகர்த்தியது.
முதல் 'நகர்த்தி' தேவை இல்லை. எழுதியதை ஒரு தடவை படித்துப் பார்த்தாலே, இதைத் தமிழிலிருந்து நகர்த்தி நகர்த்தி சென்றுவிட்டோம் என்று தெரிந்திருக்கும்.

மொழிச்சிக்கல்

தீராநதியின் முதல் இரண்டு பக்கங்களில் கிடைத்தவை இவை. மேலே செல்ல திராணியில்லை. 'ஒரு மாதிரியாக புரிந்துகொண்டுவிடுவார்கள்' என்று வாசகர்களை நம்பி, காமாசோமாவென்று எழுதப்பட்டதாக தான் எனக்கு முதலில் தோன்றியது.

ஆனால் யோசித்துப் பார்த்தால், 'உள்ளடக்கத்தின் நுட்பம் எழுத்துநடையின் சிக்கலில் வியாபித்து இருப்பது தவிர்க்க முடியாது' என்றும், அதை கவித்துவ மொழியில் எழுதிவிட்டதாக ஒரு நினைப்புமே, இதில் தெரிகிறது.

ஆசு இரியர்
ஏதோ பள்ளிக்கூட ஆசிரியர் போல இப்படியெல்லாம் எழுதவே தயக்கமாக இருக்கிறது. ஏனென்றால், இவற்றில் பல தவறுகள் இங்கு நான் எழுதியவற்றிலும் இருக்கக்கூடும் - முக்கியமாக: நினைத்ததைத் தெளிவாக எழுத்தில் கொண்டு வர முடியாமல் போவது.

ஆனால் இது ஒருவர் எழுதி, எடிட்டர் ஒருவர் படித்து, பிரசுரிக்க தகுதியானதென்று என்று முடிவு செய்து, ஒருவர் மெய்ப்பு பார்த்து - இத்தனை பேரைத் தாண்டி வாசகர்களுக்குக் கிடைத்திருக்கும் தமிழ்.

இவர்களில் ஒருவருக்குக்கூட இவை எதுவும் உறுத்தவில்லை.

மேற்சொன்னவற்றில் கிட்டத்தட்ட எதுவுமே உங்களையும் உறுத்தவில்லை என்றால், என் பொறாமைக்கு பாத்திரமானவர் நீங்கள்.

வாழ்க தமிழ்.

Comments

  1. I can swear you'r envious of more than 80 % percent of the Tamil Population!!!

    If it is a surprise to you..please wake up... the numbers are growing by the day...

    Now you should be knowing why yours truly commented in English!!!

    ReplyDelete
  2. Imagine if seethalai sathanar was alive today !!!!

    The above cited comment was the reason why the article got published !!!!

    ReplyDelete
  3. Thank you. Post Kanaiyaazhi and SubhamangaLa, after initial pretenses Thiraanadhi had become unreadable and i stopped wasting money over that magazine.

    But more importantly, a request: Can you please recommend a simple book that teaches correct Tamil, how to split words, where to add the க், ச், ட், ப் etc.? Somehow the grammar terrified me and I studied Tamil-2 only till my 8th class. Tamil 1 was called சிறப்புத் தமிழ், to Engineering stream. :(

    ReplyDelete
  4. Anon, சீத்தலைச் சாத்தனார் வரைக்கும் கூட போக வேண்டாம், என் பள்ளிக்கூட தமிழாசிரியர் பார்த்தாங்கன்னாலே 'ஐயோ பாவம்' தான்.

    படிக்கிற எவ்வளவு பேர் இதைப்பத்தி புலம்பறாங்க? 'ஓரளவுக்கு புரிஞ்சுதுனா சரி'ன்னு விடக்கூடாதுங்கறேன். பிற பிராந்திய மொழிப் பத்திரிகைகள்லயும் இந்தப் பிரச்சனை இருக்கான்னு தெரியலை.


    pvr, இந்த ஒற்று சமாசாராமெல்லாம் எனக்கு சரியாகத் தெரியாது.

    "சொல்லிப் பார், புரிந்து கொள்" அப்படின்னு மு.வ. ஒரு principle சொல்லியிருக்கார்.

    சொல்லிப்-ல 'ப்' தானா போடுறோம். புரிந்துக்-னு எழுதினா உறுத்தல்னு நமக்கே தெரியுது. அனேக இடங்கள்ல சரியா வரும்.

    'பிழையின்றி தமிழ் எழுதுவோம்'னு வானதில ஒரு புஸ்தகம் போட்டிருக்காங்க (டாக்ரர் ஶ்ரீதரன் எழுதினது). அது நல்லாயிருக்குன்னு சொல்லக்கேள்வி.

    This post is not meant to pass judgements on TheerAnadhi. To be fair, the later articles in this issue were not as bad as this one and this post makes it out to be.

    I am not talking about the content at all - that is another discussion altogether. I only want to highlight the unacceptable decline in the quality of basic prose and how we seem to have accepted it without murmur.

    ReplyDelete
  5. Just now, while seraching for N.Chokkan's blog, more by accident, I came here. My comment here hooked me. Now I have bought an excellent book ஜாலியா தமிழ் இலக்கணம் by இலவசக்கொத்தனார். இங்கே கிடைக்கும்: https://www.nhm.in/shop/978-81-8493-744-2.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Will KamalHassan apologise for Mahanadhi ?

Judex Ergo Sum

Kamal - the writer/director