சம்சாரம்

Imagining the worst is no talisman against it - Don Paterson

எங்கள் வீடு தனி வீடு. அடுக்குமாடி கட்டிடங்கள் சூழ மந்தைவெளியில் நாங்கள் மட்டும் தனியாக முறுக்கிக்கொண்டு நின்றோம். குடியிருப்பவர்களை விட வயதான வீட்டை இப்போதெல்லாம் சென்னையில் பார்க்க முடியுமா ?தகர்த்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்பாக்கி, எங்களுக்கும் இரண்டு வீடு தருவதாக ஒருவர் வந்து சொன்னார். அப்பா மறுத்துவிட்டார். முன்னொரு காலத்தில் அப்பாவின் கவிதைகள் எல்லாம் பிரசுரம் ஆகி இருக்கின்றன. அவரா தன்னை விட வயதான வீட்டை விற்பார் ? ஆனால் அப்படி ஒன்றும் வீட்டின்மேல் இஷ்டம் இருப்பதாக அவர் காட்டிக் கொண்டதில்லை. பிரியமா பழகிவிட்டதா ? (அம்மா மீது கூடத்தான்).

ஒருவேளை விற்பது அவர் கையில் இல்லையோ என்னவோ. ரவி சித்தப்பாவும் சேர்ந்துதான் முடிவு எடுக்க வேண்டும். அப்படியென்றால் 'விற்க முடியாது' என்று மட்டும் அப்பாவால் எப்படி சொல்ல முடியும் ? எது எப்படியோ மொட்டை மாடியும் துளசி மாடமும் தக்காளிச் செடியும்,வேப்பமரமும் உள்ள தனி வீடு எங்களுடையது. சென்னையில்.
*



வேலைக்காரி முந்தைய தினம் ஃப்ரென்ச் லீவ் போட்டுவிட்டதால் மொட்டை மாடியில் உலர்த்தியிருந்த துணி எடுக்கப்படவில்லை. அதனால் அன்று காலை, உள்பாவாடைகளையும், டீ-ஷர்டுகளையும் அப்பாவின் கஞ்சிபோட்ட வேஷ்டியில் லாவகமாக சுருட்டிக் கொண்டிருந்தேன்.
இடது பக்கக் குடியிருப்பில் நான்கு தளங்களிலும் பால்கனிகள் எங்கள் பக்கம். புகைபிடித்துக்கொண்டே கவிதை படிப்பதற்காக அந்த பால்கனிகள் வாங்கப் பட்டிருக்கலாம். ஆனால் சொல்லி வைத்தாற்போல நால்வரும் துணி காயப் போட்டிருந்தார்கள். வலது பக்கக் குடியிருப்பில் மொழுக்கென்ற சுவர்.திறக்கப்படாத ஜன்னல்கள், சிமென்ட் வேலைப்பாடு உள்ள வெண்டிலேட்டர்கள்: கழிவறைகள், சற்று தள்ளி தளத்திற்கு ஒன்றாக வட்ட ஓட்டைகள், அவற்றில் எக்ஸாஸ்ட் ஃபேன்கள் என்று சமையலறைகள்.
எந்த வீட்டிலிருந்தோ பேச்சுக்குரல் உயர்ந்து கொண்டே வந்தது. "போடீ ஷனியனே" என்று ஒரு ஆண்குரல் கிழித்துக்கொண்டு வந்தது.
எந்த சமையலறை என்று தேடினேன். பெண் குரல் பதில் கேட்கவில்லை. நான் படியிறங்க ஆயத்தமானபோது "போடீ நாயீ.....நன்றிகெட்ட நாயீ" என்று மறுபடி ஆண்குரல். "ஓ ! இந்த நாய் பக்கத்துலதான் தெனம் படுத்துக்கறேள் மறந்துடாதெங்கோ"
எந்த வீடு என்று காதும் விரிந்த கண்ணும் தேடிய அந்த ஒரு கணம் அவன் பதில் தாமதமானது. "நேக்கு ஒண்ணும் அவசியமில்லை கேட்டியா..."
அவன் மேலே தொடர்வதற்குள், "என்னப்பா ரெண்டு பேரும் பேசறேள்" என்று வயதான ஒரு ஆண்குரல் சமாதானம் பேசியது.மாமனோரோ தகப்பனோ, ஒரு பெரியவர் முன்னிலையில் இந்த சண்டை நடந்திருப்பது எனக்குக் கூச்சமாக இருந்தது. அங்கு குரல்கள் தணிந்ததால் துணிமூட்டையோடு கீழே இறங்கினேன்.
யாராக இருக்கும் ? அந்த கட்டிடத்தில் யார் யார் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. என்ன வார்த்தைகள் அதுவும் வீட்டுப் பெரியவர் இருக்கும்பொழுது. நான் குளிக்க வேன்டும், வேலைக்குக் கிளம்ப வேண்டும்.

**
பல்லிடுக்கில் மாடிக்கொண்ட கடுகுபோல் அன்றெல்லாம் அதே நினைவு. அவர்களும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஒருவேளை இது தினம் நடப்பதென்றால், அலுவலகத்தில் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
யாரோ பவர்பாயிண்டில் ஏதோ ஓட்டிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் சுற்றி உட்கார்ந்திருந்தோம். சுமீத் ஏதோ கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தான். "நீயும் கவனி" என்று நானே சொல்லிக்கொள்ள, "எல்லாம் பிறகு டாக்குமென்ட் அனுப்புவார்கள், படித்துக் கொள்ளலாம்" என்று பதிலும் சொல்லிக்கொண்டேன். யாராக இருக்கும் ?வழுக்கைத் தலையுடன், ஆனால் முழங்கை வரை வெண்முடியுடன் கோவிலுக்கு வரும் அந்தப் பெரியவராக இருக்குமோ ? அந்தப் பாலக்காட்டு பாஷையுடன் பொருந்தக்கூடிய சந்தன நிறம் தான் அவர். மிறட்சியான தோற்றமுடைய அவரா அன்று சமாதானம் செய்ய முயன்றவர் ? ஏனோ பொருந்தவில்லை. அது சரி, மிடுக்காக கோவிலுக்கு வந்துவிட்டால் மட்டும் இந்த மாதிரி சூழ்நிலைகளை சந்திக்காமல் இருந்து விட முடியுமா ? கூசினாலும் சமாதானம் செய்ய இறங்காமல் இருக்க முடியுமா ?ஒரு நாள் அலுவலகத்துக்கு கிளம்பும்பொழுது பக்கத்து கேட்டிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தவளைப் பார்த்தேன். தலைமுடியை நுனியில் முடிந்துவிட்டுக் கொண்டு, கைப்பையும், கண்ணாடியும், தெத்துப்பல்லுமாக வரும் இவளாக இருக்குமோ? உடன் வேலை பார்ப்பவளாக, புத்திசாலி அக்காவாக, நவராத்திரிக்கு சுண்டல் செய்யும் மாமியாக இவளை கற்பனை செய்து பார்க்க முடிகிறதே ஒழிய, ஒரு ஆணுடன்..ம்ஹூம்.
சமீபத்தில் அலுவலக நண்பன் கல்யாணத்தில் கூட அப்படித்தான் தோன்றியது. அவன் அப்படியெல்லாம் யோசித்திருப்பானா ? இந்த வருஷம் எனக்கும் ஃபோட்டோ காட்டத் தொடங்கி விடுவார்கள்.
***

"
மச்சான், ஒட்டுக்கேக்குறத விட நல்ல ஹாபி எதுனாச்சும் பழகிக்க" என்று சிரித்தான் பழநி.

"
இந்த வயசுல ஸ்டாம்ப் சேர்க்க சொல்றியா ?"

"
நீ பேச்சு கேக்காம செல்லமா வளர்ந்துட்ட. அதான் உனக்கு இது பெருசா இருக்கு......நல்லா நாக்க புடிங்க்கிற மாதிரி கேள்வி கேட்டிருக்கா.அவனுக்கும் அதுதான் சரி" என்று வார்த்தைகளின் கோபத்திற்கு சம்பதமற்ற சாந்தமான தொனியில் தொடர்ந்தான், "கை நீட்டி அடிக்கிறத விட கேவலம்டா பொண்டாட்டிய அப்பிடி மட்டமா பேசுறது"

"
இல்லடா பழநி..அவன் ஏன் அப்பிடி பேசப்போச்சு ? அப்பிடி பதில் பேசி அவளுக்கு என்ன ஜெயிக்க வேண்டியிருக்கு ?"

"
என்னடா அவன் பக்கம் பேசுற ? என்னவாயிருந்தாலும் அவன் அப்பிடிப் பேசுனது தப்பில்லையாடா ?" என்று பரிவும் அழுத்தமும் கலந்த அவனது ப்ரத்யேகமான தொனியில் கேட்டான்.

"
தப்புதான் ஆனால்...." நான் மேலே சொல்வதற்குள்..

"
நீயோ நானோ இந்த மாதிரி பேசுவோமாடா? கம் வாட் மே"
நான் சொல்ல வந்ததற்கு வெகு அருகில் வந்துவிட்டான்."அதாண்டா என் பயமே. அவன் யாருன்னே தெரியலை. அவன் என்னையும் உன்னையும் மாதிரி இல்லைன்னு எப்பிடி தெரியும்? எவனும் வீணா போகணும்னு கல்யாணம் பண்றதில்லை. அவன் சிக்கிக்கிட்டு முழிக்கிற மாதிரி இல்லை ? அவளும் தான். ஆனா அவனும் தான்.. முன்ன மாதிரி இல்லப்பு, பேசிட்டு விடுறதுக்கு. ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ, நமக்கும் இதெல்லாம் வருது"
அவன் உடனே பதில் சொல்லவில்லை. நான் சொன்னதில் ஏதோ உண்மை இருந்திருக்க வேண்டும்.

"
அப்படியெல்லாம் பயப்பட்டுக்கிட்டுருந்தா போக வேன்டியது தான்" என்றான். வேறெதுவும் சொல்வான் என்று எதிர்பார்த்தேன். சொல்வதற்கு அவனிடம் வேறெதுவும் இல்லை.

"
நீ தைரியசாலி தான் போ. எதற்கு அஞ்சாநெஞ்சன்" என்று சொல்லி சிரித்தேன்.

"
சேலம் சித்த வைத்தியர்ட்ட மட்டும் பயம்டா. க்காளி தெனம் டீவீல வந்து பீதியைக் கிளப்புறான்" என்றான்

"
எனக்கு பயமில்லைடா. அந்தாள் கணக்குப்படி நான் செத்து புல் முளைச்சிருக்கணும்"
இருவரும் சிரித்தோம். மீதி மாலை இதமான அரட்டையில் கழிந்தது.

****
'சுசீலாவும் அவள் கணவரும் டின்னருக்கு வருகிறார்கள், சீக்கிரம் வந்துவிடு' என்று அம்மா நூறு முறை சொல்லியும் அன்று தாமதமாகி விட்டது. அவர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். சுசீ என் மாமா மகள். பெங்களூரில் சமீபத்தில் தான் கல்யாணம் ஆனது. என்னால் போக முடியவில்லை. சுசீயின் கணவர் ஒல்லியாக நெடு நெடுவென இருந்தார். சாஃப்ட்வேராம். அம்மா உப்பு போட மறந்திருந்த கூட்டை எதுவும் சொல்லாமல் சாப்பிட்டார். தாத்தாவைப்போல் பாத்திரத்தை சுசீ தலையில் வீச மாட்டார். அந்த பக்கத்து ஃப்ளாட் காரனைப்போல் பேச மாட்டார்.
அதெல்லாம் அப்பிடித்தான் தோன்றும், கண்ணாடியைப் பிடுங்கி விட்டு அடுக்கி சீவிய தலையக் கலைத்தால் கொம்புகள் தெரியுமோ என்னவோ. சே! பேசாமல் பாயசம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் இவனை ஏன் இப்படியெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது. சுசீயை கல்யாணம் செய்து கொண்டு விட்டான் என்றா ?ஒரு கோடை விடுமுறையில் நானும் சுசீயும்தான் யாரும் நுழையாத ரவி சித்தப்பா அறைக்குள் நுழைந்தோம். லெனினுக்கும் மோட்டார் சைக்கீள் பராமரிப்பு பற்றிய ஏதோ புஸ்தகத்துக்கும் இடையில் இருந்த அந்த புஸ்தகத்தை அவள் தான் கண்டெடுத்தாள். ஒரு ஃப்ரென்சு பாதிரியாரின் சில்மிஷங்களை விவரிக்கும் ஆங்கில நாவல். எங்களது அந்த கோடை விடுமுறையை அதுதான் செலுத்தியது.அந்த அறை இன்று என்னுடையது, அந்த கட்டிலில்தான் தூங்குகிறேன்.

"
எங்க வொர்க் பண்றீங்க" என்று என் உயரத்துக்கு குனிந்து கேட்டான் அவன். பொதுவாக என் வேலையைப் பற்றி அவனிடம் பேசினேன். பின்ன அவனிடம் மிலன் குந்தெரா பற்றியா பேச முடியும் ? ஆனால் இந்த சாஃப்ட்வேர் ஆசாமிகளைப் பற்றி சொல்லவே முடியாது. அருணகிரிநாதர் படித்துக்கொண்டு ஒன்றுமே தெரியாதது போல் மென்பொருளில் பூச்சி பிடித்துக் கொண்டிருப்பார்கள்.
சுசீயும் நெட்டையனும் அம்மா அப்பா காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். வாசலில் காரை வழியனுப்பியபின் அம்மா சொன்னாள்:
"
நல்ல பையன் டா...கல்யாணத்துக்கு நீ வரலையே...மனுஷங்களும் ரொம்ப நல்லவங்க. அவனுக்கு ஒரு தங்கை இருக்கு....சுசீ ஜாதகம் பத்தி பேசறேன்னு சொல்லியிருக்கா"
யார் கல்யாணத்தைப் பற்றியோ பேசுவதுபோல அசிரத்தையாக கேட்டுக் கொண்டேன். சுசீ அதற்குள் அவர்கள் வீட்டு ஆள் ஆகிவிட்டதே எனக்கு வேடிக்கையாக இருந்தது. பெண் எப்படி இருப்பாள் என்று நெட்டை கொக்குக்கு பெண் வேஷம் போட்டுப் பார்த்தேன். நானும் அவளும் காலில் விழ, சுசீயும் கொக்கும் ஆசிர்வதித்தார்கள்.

*****
புது கணக்குகள் சேர வேலை பளு கூடிக்கொண்டே போனது. இந்த முறையும் ரிவ்யூவில் எதுவும் ஏற்றாமல் சுமீத்துக்குத் தூக்கிக் கொடுத்தார்கள் என்றால் 'போங்கடா' என்று சொல்லிக் கொண்டு கிளம்ப வேண்டியது தான்.
ஒரு வெள்ளிக் கிழமை அந்த கைமுடிக் கிழவரை கோவிலில் பார்த்தேன். விபூதி போல் சந்தனம் பூசிய அந்த நெற்றியை சுருக்கி அவர் ஏதோ ஆஞ்சனேயரிடம் யாசிப்பது போல இருந்தது. பள்ளிப் பரீட்சைக்குப் பிறகு நான் பிரார்தனைகளுடன் கோவிலுக்கு சென்றதில்லை. இன்னும் எவ்வளவு நாள் இப்படி இருக்க முடியுமோ.
அம்மா யார் யாரைப் பற்றி எல்லாமோ பேசினாள். "அப்புறம் பேசலாம் மா" என்று காலைக் காஃபியைத் தூக்கிக்கொண்டு மாடிக்கு நடந்தேன்,

"
இதென்னடா இப்பல்லாம் மொட்டை மாடி காஃபி ?"

"
மார்கழிப் பனி வேணா போகுதுல்ல"

"
சொல்லித் திருந்தற வயசா...தம்ள்ரைக் கீழ கொண்டு வந்துரு"


******
அந்த அறையில் யார் யாரெல்லாமோ இருந்தார்கள். என்னை ஃபைனான்ஸ் மானேஜர் என்று யாரிடமோ கேஸ் அடித்துக்கொண்டிருந்தார் அப்பா.
பஜ்ஜியில் உப்பில்லை. அம்மாவைப்போல் யாரோ போட மறந்துவிட்டார்கள். இல்லை ஒருவேளை இவர்கள் கம்மியாக உப்பு சேர்ப்பார்களோ? நாளை இவள் பழகிவிடுவாளா, இல்லை மாற்றிவிடுவாளா? பட்டுப்புடவையில் வந்து அரை டஜன் காஃபிகள் இருந்த தட்டை நீட்டினாள். ஒன்றை எடுத்துக்கொண்டு சுமாராக சிரித்து வைத்தேன்.
கல்லூரியும், கம்ப்யூட்டர் டிப்ளமாவும் படித்துவிட்டு மின்சார ரயிலில் வேலைக்கு செல்லும் பெண். சென்னை யுவதி என்ற கற்பித்துக் கொண்ட பிம்பத்தின் சுவடுகளே இல்லை. சிட்லபாக்கத்தை சென்னையில் சேர்ப்பதா?தனியாக பேசவேண்டும் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. குந்தெராவா யார் அது?" என்று சொன்னால் மட்டும் நான் என்ன செய்யப் போகிறேன். "உனக்கு ஜாவா தெரியுமா?" என்று அவள் திரும்பிக் கேட்டுவிடக் கூடும்.
நினைத்ததை விட வேகமாக நகர்ந்தது. வேண்டிய அளவு விடுப்பை அலுவலகத்தில் கொடுத்தார்கள். போன வருடம் சுமீத் கல்யாணத்திற்கு ஒரு வாரம் விடுப்பு தருவதற்கே அலட்டினார்கள். ஏதோ அவன் இல்லாமல் எதுவும் அசையாதது போல.
குரோம்பேட்டையில் ஒரு கல்யாண மண்டபம். கண்ணைக் கரிக்கும் ஹோமப் புகை. ஏகக் கூட்டம். நான் ஒரு முடிச்சு, என் அக்கா ரெண்டு. மே மாதம் கோட்டும் சூட்டும். கையில் ரிப்பன் கட்டிய பொட்டலங்களுடன் வரிசை கட்டி நின்றிருந்தார்கள். இதில் பாதி பேரை இன்றே தெரிந்திருக்க வேண்டும், மீதி பேரை நாளை முதல் தெரிந்திருக்க வேண்டும்.

"
பழநி, என் பெஸ்ட் ஃப்ரெண்ட்" அபத்தமாக ஒரு வரியில் அறிமுகப்படுத்தினேன். பின்ன என்ன, "இன்றைய தேதியில் மட்டுமல்ல பெண்ணே, நானும் நீயும் எத்தனை நெருக்கமானாலும், பழநி தான் என் முதல் நண்பன்" என்றா அறிமுகப் படுத்த முடியும் ? இன்று கல்யாணத்துக்கு வந்திருந்த அப்பாவின் நண்பர்களைக் கூட பார்த்து எவ்வளவு நாளாகிறது. நானும் பழநியும் எந்த மூலைக்கு ?அவள் என் வாயில் ஜிலேபியைத் திணிக்க, ஒரு புகைப்படக்காரர் மின்னல் தெளித்தார்.

*******
முதலில் ரசனைகளைப் பகிர்ந்து கொள்வோம், பிறகு வாழ்வின் லட்சியங்களை. எங்கள் கூட்டுப்பயணத்தில் எங்களுக்கு முக்கியமானவற்றை, நாங்கள் விரும்புபவற்றை, வெறுப்பவற்றை தெரிந்து கொள்வோம். நாளிடைவில் அந்நியம் கரைந்து அந்நியோன்யம் அதுவாகவே துளிர்க்கும்.
இந்த கவித்துவம் எல்லாம் ஒரு குரோம்பேட்டை கல்யாண மண்டப அறையில்,மின் விசிறி கிரீச்சலையும், மே மாத புழுக்கத்தையும் மீறி காணாமல் போனது. அதற்குப் பல நாட்கள் கழித்து தான் 'பிடித்த நிறம் என்ன' என்பதையே பகிர்ந்து கொண்டோம்.
திண்டுக்கல்லில் அவள் பெரியப்பா வீட்டில், கொடைக்கானலில் எல்லாம் வேறு. ஆனால் நான் வளர்ந்த வீட்டில் தயங்குவேன் என்றுதான் நினைத்தேன். சிறுவயதில் டைஃபாய்ட் வந்து இரண்டு மாதம் விட்டு அசையாத அந்தக் கட்டில். அப்போது வந்த புத்தகப் பழக்கம், நானும் சுசீயும் கண்டெடுத்தப் பாதிரியார், எல்லாம் இந்த அறை தான். என் காலை சிராய்த்த வேப்ப மரம் உள்ளவரை அந்த வீட்டில் நான் அரை நிஜார் அணிந்த பையன் தான். வேட்டி கட்டி ஏமாற்றுவது போல் தோன்றும்.
இந்த கற்பனை எல்லாம் இடம் தெரியாமல் போனது. போக்கினோம்.

"
ஏன்யா ! உம்ம ஏரியாவுல கரண்டே போவாதா?". இந்த பொய் கிராம பாஷை எங்கள் கொஞ்சல் பேச்சு.

"
போகுமே எப்பயாவது" என்று சுழன்று கொண்டிருந்த மின்விசிறியைப் பார்த்துக்கொண்டே சொன்னேன் "உங்க சிட்லப்பாக்கத்துல எப்பிடி?"
"
வரும் எப்பயாவது" என்றாள். இருவரும் சிரித்தோம். இதுபோல துணுக்குகளை சர்வ சாதாரணமாக வீசிவிட்டுப் போகிறாள். அழகி.
பக்கத்தில் நகர்ந்து அவள் கழுத்தில் முகம் புதைத்தேன். கழுத்தின் மீதே வாயை வைத்து பேசினால் அவளுக்குக் கூசும், சிரிப்பாள், இது எனக்குப் பிடித்த விளையாட்டு.

"
என் குட்டிநாயே" என்று அரைமுத்தமாக அவள் கழுத்தில் சொல்ல, எதிர்பார்த்தது போலவே களுக்கென்று சிரித்தாள்.

"
அப்போ நாய் கூட படுத்திருக்க நீர் யாரு?"

Comments

  1. அசத்திபுட்டே ராசா.....

    ReplyDelete
  2. ...adhu Minsaaram? LOL. Visu padam nyaabagathuku vandhudthu. Read and liked the opening para. But idha naan full-a padichu mudikka vegu naatkal aagum pola irukkey... kadavule! (Sighs)

    ReplyDelete
  3. arumai... chinna chinna vishayangallellam romba azhaga sollirikkinga... "naanum saadaranan dhaan" nu solra poramai yaekkam ellam azhaga irundadhu...

    ReplyDelete
  4. ஐகாரஸார் நன்றி.
    karadi nanRi
    Lexi - thanks for trying!

    ReplyDelete
  5. Very nicely written. Chinna chinna vishayangal rhomba azhaga irundhudhu.

    ReplyDelete
  6. Predictable. But, had that humour to make me read all along. Pinniteenga ji. BTW, porandhanaalame? Vaazthukkal.

    ReplyDelete
  7. வெங்கி, இது நீங்க ஏற்கனவே படிச்ச கதை தான்.
    நான் யூத்தா இருக்க சொல்லொ எயிதன்து. நீங்க கொயிந்தயா இருக்க சொல்லொ பட்ச்சது :-)

    ReplyDelete
  8. I've read this before and enjoyed your style. It's like a nice, sumaal movie, actually. :-)

    ReplyDelete
  9. hi pr,

    கதைசொல்லியாக வெற்றி பெற்றிருக்கிறீர்கள். உங்களின் இக்கதையும், படித்த எவராலும்
    மறக்க முடியாத "கடும் நகை" யும் வலைச்சரத்தில் இணைத்துள்ளேன். நன்றி. :)

    உங்கள் பதிவினை இணைத்த எனது இடுகை:
    என் இடுகை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Will KamalHassan apologise for Mahanadhi ?

Judex Ergo Sum

Kamal - the writer/director