அதீத உரையாடல்களை நிகழ்த்திவிடுவதற்காக ஒரு புனைவு களத்தைத் தயார்செய்வது ஒரு பயன்படுத்துதலாகவே (using) தோன்றுகிறது. படைப்பில் dramatization நிகழாமல் நிகழவேண்டிய ஒன்று. எந்த இடத்திலும் இது 'உண்மை' என்ற மாயை வாசகனுக்குத் தொடர வேண்டும். நிகழக்கூடியதாகத் தோன்றுவதின் ஒரு துணுக்கு காண்பிக்கப்படவேண்டும்.
தமிழில் (என் சிற்றறிவுக்கு எட்டிய வரை) அசோகமித்ரன்/ திலீப்குமார் போன்றவர்களின் எழுத்தில் இது காணக்கிடைக்கும். மற்ற அனேகர் எழுத்துக்களில் ஏதாவது ஒரு இடத்திலாவது 'இந்த இடம் வசதியாக வார்க்கப்பட்டிருக்கிறது' என்று தோன்றிவிடும்.இதை முற்றிலும் களைய நினைத்து எழுதுவது ஒரு கையைக் கட்டிக்கொண்டு வாள்வீசப் புறப்புடவது போன்றது. புனைவு வெளி தரும் விசாலமான சுதந்திரத்தை மறுத்துவிட்டு, verisimilitude-ஐ 'வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களாக' அவர்கள் ஏற்கிறார்கள். ஆனால் அவர்கள் எழுத்தில் மனிதர்கள் மனிதர்களாக இருக்கிறார்கள். பேனாவிலிருந்து தோன்றும் அயோனிஜர்களாக இல்லை. கதைகளில் என்னைக் கவர்வது இதுவே.
சரி, அங்கேயும் நிகழ்த்தக்கூடாது என்றால் அதீத உரையாடல்களை எங்கே தான் நிகழ்த்துவது ? நிஜ வாழ்வில் நிச்சயமாக முடியாது. அது உடன் உரையாடுபவர்களும், நேரமும் சேர்ந்து தர வேண்டிய சாத்தியம். அபூர்வம்.
அப்படியென்றால் இடியாப்பச்சிக்கலாய்த் தோன்றும் சிந்தனைத் தெரிப்புகளை என்ன செய்வது. ஒரு கதை புனைந்து இருவரை காபி குடிக்க அமர்த்தி பேச வைக்கக் கூடாது என்கிறாயே.
குறைந்தபட்சம் காபியை கொஞாக் ஆக்கு. அப்போது தான் அதீத உரையாடல் கொஞ்சமாவது நியாயப்படுத்தப்படும்.
வேறு வழி இல்லை, கவிதையாக்கி விடுகிறேன். கவிதை inherently அதீதம் தான். அசையாவது, சீராவது..கவிதை என்பது வெளிப்பாட்டிற்கு.
மாநகராட்சி கூட கட்டணம் வாங்கிக்கொண்டு தான் உன் வெளிப்பாடுகளை அனுசரிக்கிறது. ஒன்று செய்...ஒரு வலைப்பதிவு ஆரம்பி. உன் வயல், உன் வரப்பு. அதில் என்ன வேண்டுமானால் செய்து கொள்ளலாம். தமிழ் எழுத்துலகத்தை விட்டுவிடு.
தன்மைகள் ஞாபகங்கள் ஆவதில்லை. ஒரு ஞாபகம் என்பது நிகழ்வு சார்ந்து உருவாக்கிக்கொள்ளப்படுவதே. செயல்கள் நிகழும்போது அனேகர் பிரக்ஞைப்பூத்து இருப்பதில்லை. பழக்கத்தின் செலுத்துதலாலும், அக்கணத்தின் எதேச்சையாலுமே அனேக செயல்கள் நிகழ்கின்றன. பழக்கமும், எதேச்சையும் தன்மை நிகழ்வின் மீது பதிக்கும் தடம் என்றும் கொள்வதற்கில்லை. பல சமயங்களின் செயல்/நிகழ்வு மனநிலைக்கும், தன்மைக்கும் சம்மந்தம் இருப்பதில்லை என்பதை நீ கவனித்திருக்கலாம்.
அவ்வாறாயின் தன் செயல்களில் காணப்படாததை தனது தன்மை என்று கொள்ள இயலுமா ? தன்மை என்பதே செயல்கள், சூழல் சார்ந்த எதிர்வினைகள் பொருத்து புரிந்துகொள்ளப்படுவதல்லவா ? மற்றவர்களுக்கு என்று இல்லை. தனக்கு தானே கூட நிரூபணங்கள் தேவைப்படுகின்றன அல்லவா ? தன்மைக்கும் செயலுக்கும் முரண் வந்தால் ஞாபகம் எப்பக்கம் சாயும் ? என்றெல்லாம் நீ கேட்கலாம்.
தன்மைக்கு மாறான செயல்களை பிரக்ஞைபூர்வமாக, வேறொரு தன்மையை தரித்துக்கொள்ளும் நோக்கோடு செய்வதாக (செயல்நேரத்து பிரக்ஞை விழித்திருந்ததாக) ஞாபகப்படுத்திக்கொள்ள முடியும் என்று வைத்துக்கொள்வோம். அப்போது செயல்சார்ந்த ஞாபகத்தில் முற்றிலும் எதிர்மறையான ஒரு பிரக்ஞை சார்ந்த ஞாபகத்தை புகுத்தி விட முடிகிறது. கொடி கம்பில் படர்வதுபோல. இதனால் தன்மை பற்றி தெளிவு
கலங்காமல் முன்செல்ல முடியும்.
இது 'உண்மையை' குலைத்து ஞாபகத்தை உருவாக்கிக்கொள்வதாக நினைக்காதே. குலைப்பு என்ற சொல்லே நிகழ்வின் முழுமையை உணரும், கிரகிக்கும் திறன் நமக்கு இருப்பதாக நினைக்கும் மிகையான அனுமானத்திலிருந்து எழுவது. அது நமக்கு ஒருபோதும் கைகூடுவது இல்லை.
என்று சொன்னான்.