Conventions of Despair

 நேற்று முன் தினம் முதல் முறையாக மஹாளய அமாவாசை தர்ப்பனம் செய்தேன்

அப்பா இதையெல்லாம் செய்ததில்லை.  தாத்தாவுக்கு பெரியப்பா தான் செய்வார் என்பது மட்டும் காரணம் அல்ல. அப்பாவுக்கு தேவைப்பட்டதில்லை.


But, Sorry, I cannot unlearn

Conventions of Despair

They Have their Pride


நான் சாப்பிடுவதற்கு முன், சாதத்தில் கருப்பு எள் தூவி காக்கைக்கு வைத்தேன்.


**

அன்று புரட்டாசி உத்திரம். மகள்களுக்கு இரண்டு வயது பூர்த்தி ஆகிறது. இந்த புரட்டாசியில் இன்னொரு உத்திரம் வரும். அது தான் பிறந்தநாளாகக் கணக்கு. ஆனால் அப்பா இரண்டையுமே கொண்டாடச் சொல்லியிருப்பார்.

மாலையில் ஒரு கேசரி செய்து நிவேதனம் செய்தோம்.

விசேஷங்கள் என்றுமே எனக்கும் அப்பாவுக்கும் பாசுரம் படிக்க ஒரு சாக்கு.  கிருஷ்ணஜெயந்திக்கு வெறுமனே  வெண்ணையில் சக்கரையை தூவிக்கலக்கி பெரியாழ்வாரைத் தூக்கி வைத்துக்கொண்டு விடுவோம். 

நேற்று முதல்முறையாக தனியாக பாசுரம் படித்தேன்.

குழந்தைகளுக்கு தலைமுடி எளிதில் கலைந்து பரட்டையாகத் தொடங்கிவிட்டது.

 பெரியாழ்வார் திருமொழியின் இரண்டாம் பத்தின் ஐந்தாம் திருமொழி பாடல்களைப் படித்து நிவேதம் செய்தேன். கண்ணணுக்கு தலைவார காக்கையை அழைக்கும் பாடல்கள் அவை. மிக எதேச்சையாகவே தெரிவு செய்தேன்.

 அதில் ஏழாம் பாடல்


பிண்டத் திரளையும் பேய்க்கு இட்ட நீர்ச்சோறும்

உண்டற்கு வேண்டிநீ ஓடித் திரியாதே

அண்டத்து அமரர் பெருமான் அழகு அமர்

வண்டு ஒத்து இருண்ட குழல் வாராய் அக்காக்காய் !

                    மாயவன்தன் குழல் வாராய் அக்காக்காய்!


முதல் இரு வரிகளை அப்பா அடிக்கோடிட்டு வைத்திருக்கிறார்.

Comments

Post a Comment

Popular posts from this blog

Will KamalHassan apologise for Mahanadhi ?

Judex Ergo Sum

Kamal - the writer/director